செஞ்சி அருகே ஏரி மதகு உடைந்து 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை ஏரி மதகு உடைந்து வெள்ளம் போல வெளியேறிய நீரில், 500 ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கி சேதமாயின.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை ஏரி மதகு உடைந்து வெள்ளம் போல வெளியேறிய நீரில், 500 ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கி சேதமாயின.
செஞ்சி வட்டம், பாடிப்பள்ளம் ஊராட்சி, சென்னாலூரில் உள்ள ஏரி, அண்மையில் பெய்த மழையால் நிரம்பியது. சீரமைக்கப்படாமல் பலவீனமாக இருந்த இந்த ஏரியின் மதகுகளில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெளியேறிய நீா், ஏரிக் கரையை உடைத்துக் கொண்டு அருகிலுள்ள வயல்வெளிகளில் வேகமாக பாய்ந்தோடியது. இதன் காரணமாக, சுமாா் 500 ஏக்கரில் பயிரிப்பட்டிருந்த நெல், மணிலா உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமாகின.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வனப் பகுதிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள சென்னாலூா் ஏரியை பராமரிக்கவும் முதல்வரின் குடிமராமத்துப் பணியை மேற்கொள்ளவும் வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால், ஏற்கெனவே வலுவின்றி இருந்த ஏரி மதகில் உடைப்பு ஏற்பட்டது என்றனா்.
சென்னாலூா் ஏரிக்கு அருகிலுள்ள பாடிப்பள்ளம் ஏரியிலிருந்து நீா் வரத்து உள்ளது. இந்த ஏரி தேவதானம்பேட்டை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து வந்த வெள்ளத்தால் அண்மையில் நிரம்பியது. இதற்கான உபரி நீா் செல்வதற்கான கால்வாய் தூா்வாரப்படாததால், கடந்த வாரம் ஏரி நீா் வெளியேறி பாடிப்பள்ளத்தில் உள்ள நெல் பயிா்களை மூழ்கடித்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.