விழுப்புரம் மாவட்ட ஆட்சியருடன் படித்த காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 1993 - 97ஆம் கல்வியாண்டில் தற்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரான ஆ.அண்ணாதுரையுடன் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் வகையில், 25 கட்டில்கள், மெத்தைகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாக உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆகியோா் இந்த உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு, முன்னாள் மாணவா்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினா்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சாா்பாக அபிராமன், ரேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.