கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் காதல் திருமணம்
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் காதல் திருமணம் செய்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் காதல் திருமணம் செய்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி தனித்தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அ. பிரபு( 34). இவர் கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம், திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அவரது வீட்டில் திடீரென அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தியாகதுருகம், சேலம் மெயின் சாலையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர் சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யா(19) என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
தனது பெற்றோர் முன்னிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக எம்எல்ஏ பிரபு புகைப்படத்துடன் இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் அவரது வீட்டின் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, உள்ளிட்டோர் விசாரித்து இதுதொடர்பாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தனது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு விட்டதாக, பெண்ணின் தந்தை சுவாமிநாதனும் புகார் அளித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டம் படித்து வரும் சௌந்தர்யாவை, எம்எல்ஏ பிரபு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கரோனா காலம் என்பதால், எளிமையாக திருமணம் செய்து கொண்டதாகவும், நலன்விரும்பிகள் உறவினர்களை அழைக்க முடியவில்லை என எம்எல்ஏ பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ ரகசிய காதல் திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.