திண்டிவனம் அருகே லாரி மீது ஆட்டோ மோதல்: 2 பேர் பலி, 10 பேர் காயம்
திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் பகுதியில் உணவக ஒன்று புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் உணவருந்த வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி அளவில் தனது லாரியை உணவகத்தின் முன் நிறுத்திவிட்டு சென்றார். இந்நிலையில், புதுவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அட்டை தொழிற்சாலையில் திண்டிவனம் அருகே கிளியனூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் பணியாற்றிவிட்டு விட்டுக்கு ஆட்டோவில் கிளியனூருக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை வானூர் அருகே பாப்பான்சாவடியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் அய்யனார்(21) ஓட்டி வந்தார்.
இந்நிலையில், அந்த வழியாக சென்ற ஆட்டோ தைலாபுரத்தில் சாலையோர உணவகம் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் ஆட்டோவின் முன் பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த உதயா மனைவி ஞானவள்ளி (22), மாணிக்கவாசகம் மகள் அங்காளபரமேஸ்வரி (14) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பாலியானர்கள். மேலும், ஆட்டோவில் பயணித்த அதே ஊரைச் சேர்ந்த சூர்யா(14), ஜமுனா(37), மீனா(19), காமாட்சி(19), சரளா(15), ஸ்ரீமதி(16), வெண்ணிலா(19), வரலட்சுமி(31) உள்பட 11 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அய்யனார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
Advertisement
தகவல் அறிந்த கிளியனூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, கிளியனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.