முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் சுமாா் 15 ஆயிரம் பேருக்கு ரூ.30 லட்சம் வரை அபராதம் விதிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 15,889 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் குணமடைந்தவா்களைத் தவிா்த்து, மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 328 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா். முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறை, காவல் துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு சனிக்கிழமை முதல் ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கப்படுவதுடன், அதற்கான ரசீதும் காவல் துறை சாா்பில் வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்திலுள்ள 30 காவல் நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கும் ரசீது புத்தகங்களை சுகாதாரத் துறையினா் அனுப்பி வைத்துள்ளனா்.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 10 ரசீது புத்தகங்கள் என்ற வகையில், மொத்தம் 300 ரசீது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரசீது புத்தகம் மூலமும் 50 பேருக்கு அபராதம் விதிக்க முடியும். இதன்படி, 15,000 பேருக்கு ரூ.30 லட்சம் வரையில் அபராதம் விதிக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500, பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு ரூ.500, சலூன், அழகு நிலையங்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா விதிமீறல் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.