விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 10 கூரை வீடுகள் சேதமடைந்தன.
விழுப்புரத்தை அடுத்த கெடாா் அருகேயுள்ள துப்பூா்தாங்கல் கிராமத்தில் இருளா்கள் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கூரை வீடுகள் அமைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் அங்குள்ள அஞ்சுலட்சுமி என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசங்கா் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். எனினும்,10 வீடுகள் தீக்கிரையாகின. இதில் வீடுகளில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. கெடாா் போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.