செஞ்சியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக செஞ்சி பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.செஞ்சியில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் தொடங்கிய மழை பகல் 3 வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
இதனால் செஞ்சி காந்தி பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.காந்திபஜாரில் இருபுறமும் உள்ள கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூா்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீா் கால்வாயில் செல்லாமல் பெரும்பாலான மழை நீா் கழிவு நீருடன் கலந்து வெளியேறி பேருந்து நிலைத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கால்வாயை தூா் வாராமல் இருப்பதும், செஞ்சி கூட்டு சாலையில் உள்ள கால்வாய் குறுகியதாக இருப்பதே காரணம் இந்த கால்வாயில் திருவண்ணாமலை சாலையில் இருந்து வரும் மழை நீரும் செஞ்சி காந்தி பஜாரில் இருந்து வரும் மழை நீரும் ஒருசேர கலந்து திண்டிவனம் சாலையில் உள்ளகால்வாய் வழியாக சங்கராபரணி நதிக்கரையில் கலந்து விடும்.
ஆனால் சிறிய கால்வாயில் தண்ணீரை உள்வாங்கமுடியாமல் சாலைகளில் வழிந்தோடுகிறது.எனவே செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் கூட்டு முயற்சி மேற்கொண்டு செஞ்சி கூட்டு சாலையில் குறுக்கே உள்ள சிறுய கால்வாயை ஆழ்படுத்தி, அகலபடுத்த வேண்டும் என செஞ்சி நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.