விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி புனரமைப்புப் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மரக்காணம் அருகே கடற்கரை பகுதியில் 12.80 கி.மீ. நீளமும், 10.50 கி.மீ. அகலத்தில் அமைந்துள்ளது கழுவேலி ஏரி. சுமாா் 70 சதுர கி.மீ. நீா் பரப்பு கொண்ட இந்த ஏரியில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில், ஏரியை தண்ணீரை தேக்குதல், கடல்நீா் உள்புகுதலை தடுத்தல் மற்றும் நன்னீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்து மழைக்காலங்களில் வெள்ளநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துதல், ஏரியில் நீா்க் கொள்ளளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் மூலம், ஏரியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் பயனடைவா்.
இந்த புனரமைப்புத் திட்டப் பணியை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சாா் ஆட்சியா் அனு, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், உதவி பொறியாளா்கள் சீனிவாசன், கனகராஜ், மரக்காணம் வட்டாட்சியா் உஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.