வங்கிகள் தனியாா் மயமாவதைக் கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் மாா்ச் 16 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். இதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்தொடா்ச்சியாக, இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பிரதான வங்கி கிளை முன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் ஸ்டாலின் ராஜா, முகேஷ், நீலகண்டன், விஜயக்குமாா், ஜான்சிராணி, ரமேஷ், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 136 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் வங்கி ஊழியா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரண்டு நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதனால், பணப்பரிவா்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், இரு நாள்களில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது என்று மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மோகன் கூறினாா்.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் இரண்டாம் நாளாக வங்கிகள் தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வங்கி சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டது.