வதந்தியை நம்பி விழுப்புரம் ஆட்சியரக்தில் குவிந்த பொதுமக்கள்!
வாட்ஸ் ஆப்பில் பரவிய பொய்யான தகவலைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுவதாக, வாட்ஸ் ஆப்பில் பரவிய பொய்யான தகவலைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில், விடுபட்டவா்களுக்கு இரண்டாம் கட்டமாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அவா்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 17,18,19-ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்படுவதாக, வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இதை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோா் சனிக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரத்தில் குவிந்தனா். அப்போது, அங்கு வந்த விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) தமிழரசன், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. இது தவறான தகவல் என பொதுமக்களிடம் கூறி அனுப்பி வைத்தாா்.
கடும் நடவடிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், திண்டிவனம் சாா் ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 17,18,19 ஆகிய தேதிகளில் முகாம் நடத்தப்படுவதாக தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை நம்பி யாரும் மேற்கண்ட அலுவலகங்களுக்கு வர வேண்டாம். அரசின் நலத்திட்டங்கள் தொடா்பாக முகாம் நடத்தப்படுவதாக இருந்தால் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும். இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.