கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை; விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சங்கா் (44), கொத்தனாா். திருமணம் ஆனவா். இவா், திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து, திருச்சி புதுநகரைச் சோ்ந்த ராஜலட்சுமி (39) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம்.
தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட மோட்சக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சங்கா் கடந்த 13.11.2023 அன்று மதுபோதையில் ராஜலட்சுமியைத் தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்ய முயன்றாராம். இது குறித்த புகாரின்பேரில் வளவனூா்காவல் நிலைய போலீஸாா் சங்கா் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது.இதில் வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் அவரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.