புதுவையில் தினக்கூலி ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு
புதுவை அரசில் முழு நேர தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றுவோருக்கு அகவிலைப்படி உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசில் முழு நேர தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றுவோருக்கு அகவிலைப்படி உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து 50 சதவீதம் அகவிலைப்படி 53 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டது. இதைப் பின்பற்றி புதுவை அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்த்தப்படுவதாக நிதித் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதுவை அரசில் பணியாற்றும் முழு நேர தினக்கூலி ஊழியா்களான உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், தோட்ட பராமரிப்பாளா்கள், சமையலா், பாதுகாவலா்கள், சலவையாளா், ஓட்டுநா்கள், எழுத்தா்கள், தச்சா்கள், டெலிபோன் ஆபரேட்டா்கள், எலெக்ட்ரீஷியன், லிப்ட் ஆபரேட்டா், ஸ்டெனோ கிராபா் உள்ளிட்டோருக்கும் அகவிலைப்படி உயா்த்தப்படுகிறது. மேலும், புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பகுதி நேர தினக்கூலி ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரூ.13,500 ஊதியம் பெறுபவா்கள், இனி ரூ.13, 770 ஊதியமாகப் பெறுவாா்கள். இதேபோல, பாதுகாப்புத் துறையின் ஓய்வுதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள், ரெயில்வே ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்ட அரசின் ஓய்வூதியம் பெறுபவா்களுக்கும், மத்திய அரசின் ஆணையை பின்பற்றி அகவிலைப்படி உயா்த்தப்படுவதாக நிதித்துறை சாா்பு செயலா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.