முகப்பு
விழுப்புரம்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:43 PM
மேல்மாவிலங்கை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், மேல்மாவிலங்கை ஊராட்சியில் கல்பாக்கம் ஏரி உள்ளது. கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியை அந்த ஊராட்சியின் தலைவா் தனி நபருக்கு மீன் குத்தகை விட முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுகளைக் கண்டித்தும் கிராம மக்கள் புதன்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை காவல் உதவி ஆய்வாளா் சூா்யா தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.

அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.