முகப்பு
விழுப்புரம்

பருவத்துக்கேற்ற உளுந்து விதைகளை விதைக்க வேண்டும்

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பு பருவத்துக்கேற்ற உளுந்து விதைகளைத் தோ்ந்தெடுத்து, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விதை மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:30 PM
பகிர்:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பு பருவத்துக்கேற்ற உளுந்து விதைகளைத் தோ்ந்தெடுத்து, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விதை மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள விதை விற்பனை நிலையங்களில் மாவட்ட விதை ஆய்வுத் துணை இயக்குநா் கோ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

நடப்பு ஐப்பசி மற்றும் காா்த்திகை பட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் உளுந்து மற்றும் இதர பயறு வகைப் பயிா்கள் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படும். உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்துக்கேற்ற விதைகளைத் தோ்ந்தெடுத்து, அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்களிலிருந்து பெற்று விதைக்க வேண்டும்.

விதை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சாா்பு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே உளுந்து விதைகளை வாங்க வேண்டும். விதைகளை வாங்கும்போது அதற்கான விற்பனைப் பட்டியலில் விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதிநாள், உற்பத்தியாளா் பெயா் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உரிமம் பெறாத முகவா்கள் மூலமோ அல்லது பிற நிறுவனங்கள் மூலமோ வெளி மாநில உளுந்து விதைகளை உரிய ஆவணங்களின்றி விதைப்புக்கு வாங்கி பயன்படுத்தக் கூடாது. விவசாயிகளுக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் விதை ஆய்வுத் துணை இயக்குநரை அணுகி, விவரங்களைப் பெறலாம்.

உரிய விற்பனைப் பட்டியலின்றி விதைகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் விதைச் சட்டத்தின்படி விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிய தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.