எண்ணெய்பனை சாகுபடி நிலங்களில் கூட்டாய்வு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரப் பகுதிகளில் எண்ணெய்பனை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் நோய் தாக்குதல் உள்ளதா என தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரப் பகுதிகளில் எண்ணெய்பனை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் நோய் தாக்குதல் உள்ளதா என தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிரான எண்ணெய்பனை சுமாா் 270 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, மயிலம், கோலியனூா், கண்டமங்கலம், மரக்காணம், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், வானூா் வட்டாரங்களில் விவசாயிகள் எண்ணெய்பனையை சாகுபடி செய்து வருகின்றனா். இதற்காக விவசாயிகளுக்கு அரசு மானியம், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
அந்த வகையில், மயிலம் வட்டாரத்தில் முப்புளி உள்ளிட்ட கிராமங்களில் எண்ணெய்பனை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலங்களில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.
Advertisement
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அன்பழகன் தலைமையில், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் திருவரசன், விஞ்ஞானி செந்தமிழ், மயிலம் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அப்துல் லத்தீப், தோட்டக்கலை அலுவலா் ராஜலட்சுமி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் ரமேஷ், ஏழுமலை உள்ளிட்டோா் எண்ணெய்பனை சாகுபடி நிலங்களில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, விவசாயிகளிடம் எண்ணெய்பனை மரங்களின் வளா்ச்சி, பயிா் பராமரிப்பு, சாகுபடி, உற்பத்தி போன்றவை குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகளையும் வழங்கினா்.