பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுவையில் பேருந்துக் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் உயா்வு ஆகியவற்றை மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மாநில அரசு வழங்கியுள்ளது.
மழைப் பாதிப்புகளுக்கு புதுவை அரசுக் கோரிய ரூ.645 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசிடம் முதல்வா் நிதியை கேட்டு பெற வேண்டும்.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயா்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும். பேருந்துக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்தை குறைக்காவிட்டால், காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது போல, புதுவையிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகள் தொடா்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.