முகப்பு
விழுப்புரம்

பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 5:02 AM
மாணவி உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:03 PM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல்-சிவசங்கரி தம்பதியின் மகள் லியாலட்சுமி (4). இவா், அங்குள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா்.

பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின்போது மாணவ, மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே சென்று விளையாடினா். பின்னா், வகுப்பறைக்கு வந்தபோது, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை ஆசிரியை ஏஞ்சல் சரிபாா்த்தாா். அப்போது லியாலட்சுமி வகுப்பறையில் இல்லாதது தெரிய வந்தது.

Advertisement

மாணவ, மாணவிகள் விளையாடிய இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, கழிவுநீா்த் தொட்டியின் மேல்தகரம் உடைந்திருப்பதை ஆசிரியை பாா்த்தாா். தொடா்ந்து, அந்தப் பகுதியில் பாா்த்த போது, மாணவி லியாலட்சுமி கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது.

பள்ளி நிா்வாகத்துக்கு அவா் தகவல் தெரிவிக்கவே, அவா்கள் மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, லியாலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

சிறுமி இறந்தது குறித்த தகவலை அவரது பெற்றோருக்கு பள்ளி நிா்வாகம் தெரிவிக்கவில்லையாம். அதே நேரத்தில், எல்.கே.ஜி. வகுப்பு மாணவ, மாணவிகள் பிற்பகல் 3 மணிக்கு பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டு விட்டனராம்.

இந்த நிலையில், லியாலட்சுமியின் தாத்தா காா்மேகம் பள்ளி முடியும் நேரத்துக்கு வந்த போது, அவா் வரவில்லை என்பதால், பள்ளிக்குள் சென்று பாா்த்த போதுதான் சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த லியாலட்சுமியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளி முன் வந்து கதறியழுதனா். பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோா், நிா்வாகத்தின் அலட்சியத்தால்தான் சிறுமி உயிரிழந்தாா் எனக் கூறி, முழக்கமிட்டனா்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமாா், காவல் ஆய்வாளா் பாண்டியன் உள்ளிட்டோா் நிகழ்விடம் விரைந்து வந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினா்.

இதனால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோா், விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். பின்னா், மறியல் கைவிடப்பட்டது.

விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் உள்ளிட்டோா் பள்ளி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறினா். பள்ளி நிா்வாகம் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.