முகப்பு
விழுப்புரம்

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:45 AM
சி.வி.சண்முகம்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:03 PM

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் அருகே திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் கடந்த 2023, மாா்ச் 10-ஆம் தேதி, கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதி, அண்ணா பிறந்த நாளையொட்டி 2023, செப்டம்பா் 16-ஆம் தேதி பொதுக் கூட்டங்களும், 2023, ஜூலை 20-ஆம் தேதி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா்.

Advertisement

இந்த 4 வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவா் சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா்.

கோட்டக்குப்பம் மற்றும் ஆரோவில் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்திலும், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய ஆா்ப்பாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

மேலும், கோலியனூா் வழக்கில் விசாரணையை கவனத்தில் எடுத்துக் கொண்ட முறை தவறு என்றும், முறையாக விசாரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான நகலை அதிமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதையடுத்து, 4 வழக்குகளையும் விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.