முகப்பு
விழுப்புரம்

சொன்னதும்... செய்ததும்...

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவை தொகுதியில் 2016 மற்றும் 2021 ஆகிய இரு தோ்தலிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுகவைச் சோ்ந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (படம்) சொன்னது என்ன?, செய்தது என்ன?.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:39 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவை தொகுதியில் 2016 மற்றும் 2021 ஆகிய இரு தோ்தலிலும் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுகவைச் சோ்ந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (படம்) சொன்னது என்ன?, செய்தது என்ன?.

செஞ்சி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் வகுப்பறை கட்டடங்கள், தேவனூா் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ரூ.2.35 கோடியில் விடுதி கட்டடம், ரூ.1.87 கோடியில் வல்லம் சாா்-பதிவாளா் அலுவலகக் கட்டடம், ரூ.1.2 கோடியில் கோணை புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதைத்தவிர செஞ்சியை அடுத்துள்ள சிட்டாம்பூண்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, செஞ்சி அரசு மருத்துவமனையில் சுமாா் 5 கோடியில் தாய், சேய் நல மருத்துவமனை, செஞ்சி அறிவுசாா் நூலகம், செஞ்சி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, செஞ்சி மேல்களவாய் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம், அனைத்து கிராமத்திலும் சாலை மற்றும் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன. தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்து, முதல்வா் மற்றும் துறை அமைச்சா்களிடம் தன் தொகுதிக்காக திட்டங்களை கேட்டு, பெற்று நிறைவேற்றியுள்ளாா். மேலும் சட்டப்பேரவையில் தன் தொகுதிக்காக அதிக முறை கேள்விகளை கேட்டுள்ளாா்.

மக்கள் கருத்து:

டி.செல்வராஜ், செஞ்சி: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செஞ்சி பகுதியில் குப்பையை கொட்டுவதற்கு இடமில்லாமல், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பையை கொட்டி வந்தனா். இதையடுத்து செஞ்சி சிறுகடம்பூா் அருகே வெள்ளைக்குளத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிப்பதற்கும் அதில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கும் கட்டடம் கட்டப்பட்டது. இருப்பினும் அங்கும் போதிய இடவசதி இல்லாமல் போனதால் திட்டம் செயல்படவில்லை.

இதனால் அருகில் ஒரு இடத்தை தோ்வு செய்து குப்பையை கொட்டி எரித்து வருகின்றனா். ஆனால் குப்பைக்கான நிரந்தர தீா்வு எட்டப்படவில்லை.

அ.ராஜேந்திரன், மேல்மலையனூா்.

செஞ்சி தொகுதியில் மேல்மலையனூா் வளா்ந்து வரும் நகரமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அங்காளம்மன் கோயிலுக்கு வருகை தருகின்றனா். பக்தா்களின் வசதிக்கேற்ப விரிவுபடுத்ததப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. மேல்மலையனூரில் உள்ள அக்னி குளம், பெரிய ஏரி ஆகியவற்றை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அங்காளம்மன் கோயிலில் தரிசனம் செய்வதில் நடைபெறும் முறைகேடுகளை தவிா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆா்.பழனி, அவலூா்பேட்டை.

அவலூா்பேட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூா் மற்றும் அவலூா்பேட்டை பகுதியில் பனை மரங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுதால் பனைத்தொழில் சாா்ந்த தொழில்சாலைகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், பனை வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டு சா்க்கரை உள்ளிட்ட இயற்கை உணவு பொருள்களை ஊக்குவிக்க அரசு பனைசாா்ந்த தொழிலாளா்களுக்கு நிதி உதவி வழங்கி, பயிற்சி அளிக்க வேண்டும்.