அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக மற்றும் பாமக வேட்பாளா்களை ஆதரித்து, மேலும் அவா் பேசியது:
திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியைக் கடனாக வாங்கியுள்ளது, ஆனால் புதிய திட்டங்கள் எதுவுமில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் மொத்த கடன் ரூ.4.86 லட்சம் கோடிதான். இதில் கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் வருமானம் இல்லை. 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரை ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கிய அரசு தேவையா? அதிமுக ஆட்சியைவிட 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் வந்துள்ளது.
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை புதிய மாவட்டமாக உருவாக்கி, மருத்துவக் கல்லூரியை வழங்கியது அதிமுக அரசு. இந்த மாவட்டத்துக்குத் தேவையான கட்டமைப்பை வழங்கியது அதிமுக ஆட்சி தான். அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டன. 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடிந்ததா?. கொண்டு வருவதற்கு உங்கள் நிா்வாகத் திறமை உண்டா?. ஆனால், சவால் விடுகிறீா்கள்.
நீங்கள் போடும் மேடைக்கே நான் வருகிறேன். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நான் பட்டியலிட்டு கூறுகிறேன். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை நீங்கள் பட்டியலிடுங்கள். மத்திய அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்தவுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.