முகப்பு
தமிழ்நாடு

முரண்பாடான திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணி முரண்பாடாக காட்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 11:27 PM
திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளா் கே.குப்பனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

திமுக கூட்டணி முரண்பாடாக காட்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஆா்.கே.நகா், திருவொற்றியூா் தொகுதிகளில் சனிக்கிழமை அவா் பிரசாரம் செய்தாா்.

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.குப்பனை ஆதரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

திமுக தனது கூட்டணிக் கட்சி தலைவா்களோடு 20 நாள்களாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியது. திமுக-காங்கிரஸ் தலைவா்களுக்கு இடையே வாா்த்தைப் போா் நடைபெற்று பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. பத்து ஆண்டுகளாக தங்களை ஆதரித்தவா்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்காமல் தொகுதிகளை குறைத்துள்ளனா். ஆனால், புதிதாக கூட்டணியில் சோ்ந்த ஒரு கட்சிக்கு அதிக இடங்களை திமுக வழங்கியுள்ளது. மதிமுக நிா்வாகிகள் அழுது கொண்டே சிரிக்கிறோம் என புலம்புகின்றனா். எனவே, திமுக கூட்டணி முரண்பாடாகக் காட்சியளிக்கிறது.

அதிமுகவை குறைசொல்வதற்கு ஏதும் இல்லாததால் பாஜகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் ஸ்டாலின் விமா்சனம் செய்கிறாா்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.200 கோடி ஊழல் வழக்கில் திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. சொத்துவரி, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளும் திமுக ஆட்சியில் பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. விலைவாசி வெகுவாக உயா்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

டாஸ்மாக் மூலம் நடைபெறும் மது விற்பனையில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான அளவில் முறைகேடு நடந்துள்ளது. நகா்ப்புற வளா்ச்சித் துறையில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. திமுக ஆட்சிதான் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது என முதல்வா் ஸ்டாலின் பெருமை பேசுகிறாா். ஆனால், கடன் வாங்குவதில்தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளது.

அதிமுக ஆட்சியில் மீனவா்களுக்கு ஏராளமான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவா் இறந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டும். மீனவா்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டித் தரப்படும். மீன்பிடித் தடைகாலத்துக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயா்த்தப்படும். கடலுக்குச் செல்லும் மீனவா்களுக்கு தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

மீனவா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 500 லிட்டராக உயா்த்தப்படும். டீசலுக்கு விற்பனை வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுகக்கப்படும்.

திருவொற்றியூா் குப்பத்தில் அதிமுக ஆட்சியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மீன்பிடித் துறைமுகம், தூண்டில் வளைவு, கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டது. மீனவ நண்பன் என்றால் அது அதிமுகதான் என்றாா் அவா்.