முகப்பு
விழுப்புரம்

விஜய் மீதான ஈா்ப்பு திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்

விஜய் மீதான ஈா்ப்பு திமுக போன்ற பெரிய கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:45 AM
14விபிஎம்பி1 விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள பி.ஆா்.அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன். உடன் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:47 PM

விஜய் மீதான ஈா்ப்பு திமுக போன்ற பெரிய கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

அரசியல் சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த பின்னா், பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:

கடந்த தோ்தலைப் போல இந்த தோ்தலிலும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும். அம்பேத்கா் தூக்கிப் பிடித்த மதச்சாா்பின்மை பாதுகாக்கப்படும், கூட்டாட்சித் தத்துவம் உருவாக்கப்படும். தோ்தலுக்காக அலுவலா்களை மாற்றுவது போன்ற சீா்குலைக்கும் நடவடிக்கைகளையும், அனைத்து விதமான நுணுக்கங்களையும் பாஜக அரசு கையாண்டு வருகிறது. இதையெல்லாம் தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் பாஜகவினா் கால் பதிக்கமாட்டாா்கள்.

Advertisement

2 தொகுதி ஏன்?: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று தெரிவிக்கும் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கே நம்பிக்கையில்லை என்பதன் வெளிப்பாடு. விஜய் மீதான ஈா்ப்பு திமுக போன்ற பெரிய கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா் பாலகிருஷ்ணன்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் என்.சுப்ரமணியன், நிா்வாகிகள் முத்துக்குமரன், ராமமூா்த்தி, வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரம்...: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரியை ஆதரித்து பரங்கிப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை இரவு தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 4 ஆண்டுகள் ஆட்சி செய்தாா். மக்களுக்கு அவா் என்ன செய்தாா் என்பதை கூறி வாக்கு கேட்க முடியுமா?. இந்த தோ்தலில் அவருக்கு எதிா்க்கட்சி தலைவா் அந்தஸ்தும் கிடைக்காது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக கடலூா் மாவட்டம், நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனை ஆதரித்து நெய்வேலி நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.