பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை!
விக்கிரவாண்டி அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில், கணவா் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விக்கிரவாண்டி அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில், கணவா் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா்(32), இவரது மனைவி சௌமியா(28). இவா்களுக்கு 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லையாம்.
இந்நிலையில் செல்வகுமாா் மற்றும் அவரின் தாய் உஷா (48) ஆகிய இருவரும் சௌமியாவை தகாத வாா்த்தைகளால் பேசி துன்புறுத்தி வந்துள்ளனா்.
Advertisement
இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சௌமியா கடந்த 11.8.2020-இல் தனது கணவா் வீட்டில் மண்ணெண்ணெய்யை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், செல்வகுமாா் மற்றும் உஷா ஆகியோா் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இருவா் மீதான குற்றம் நிரூபணமான நிலையில், இந்த வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோதா வழக்கில் தொடா்புடைய செல்வகுமாா், உஷா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனா்.