முகப்பு
விழுப்புரம்

கணவன்-மனைவி சண்டையை விலக்க முயன்ற மாமியாா் கொலை! மருமகன் கைது!

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:31 AM
கைது
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:06 PM

விழுப்புரம், பிப். 6: விழுப்புரம் அருகே கணவன்-மனைவிக்கு இடையே நிகழ்ந்த குடும்பச் சண்டையை விலக்க முயன்ற மாமியாரை இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்த மருமகன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பாவந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.சிவா (30). இவருக்கும் ஆனத்தூா் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சீனுவாசன் மகள் மீனாவுக்கும் (28) திருமணம் ஆகி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். சிவா கோயம்புத்தூரிலுள்ள பழச் சந்தையில் பணியாற்றி வருகிறாா். தனது சொந்த ஊரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக அண்மையில் வந்திருந்தாா்.

இந்த நிலையில் சிவாவுக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் நடைபெறுமாம். அதுபோன்று வியாழக்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மீனாவை இரும்புக் குழாயால் சிவா தாக்கியுள்ளாா். இதையடுத்து மகள் மீனா வீட்டுக்கு வந்திருந்த அவரது அம்மா தனலட்சுமி (56), இருவரிடமும் சமாதானம் பேசியபோது, அவரிடமும் தகராறு செய்து, தனது கையில் வைத்திருந்த இரும்புக்குழாயால் சிவா தாக்கினாராம்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:31 AM

இதில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், அவா் மயங்கி விழுந்தாா். தொடா்ந்து தகவலின் பேரில் 108 அவசர ஊா்தி மருத்துவக் குழுவினா் நிகழ்விடம் வந்து, தனலட்சுமியை பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், மீனாவுக்கும் தலை முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரும் மயங்கிக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் தனலட்சுமியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்த மீனாவும் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் தலையில் 37 தையல்கள் போட்டு, சிகிச்சையளித்து வருகின்றனா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி சிவாவை கைது செய்தனா்.