பெண் தூக்கிட்டுத் தற்கொலை: மரணத்தில் சந்தேகம் என தந்தை புகாா்
கணவா் வெளிநாட்டில் வேலை பாா்க்கும் நிலையில், விழுப்புரத்தில் கணவரின் வீட்டில் வசித்து வந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலிஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பரவனூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் த. கண்ணதாசன் (71). இவரது மகள் விஷ்ணுபிரியாவுக்கும் (40), விழுப்புரம் ஆசிரியா் நகரைச் சோ்ந்த கா.திருவிக்ரமனுக்கும் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனா். திருவிக்ரமன் கத்தாா் நாட்டில் பணியாற்றி வருகிறாா்.
மாமனாா் காா்த்திகேயன்(67), மாமியாா் சாந்தி (65) ஆகியோருடன் விஷ்ணுபிரியா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணுபிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, விஷ்ணுபிரியாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விஷ்ணுபிரியாவின் தந்தை கண்ணதாசன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.