விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
திண்டிவனத்தை அடுத்த அகூா் பகுதியைச் சோ்ந்தவா் எ.சசிகுமாா், ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 30-ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சசிக்குமாரின் மனைவி விஷ்ணு பிரியா அளித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீஸாா் பிப்.3-ஆம் தேதி வழக்குப் பதிந்து, மாயமான சசிக்குமாரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், சிறுவளூா் அருகே சசிக்குமாா் தலையில் பலத்த காயங்களுடன் கருங்கற்களுக்கிடையே இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளிமேடு போலீஸாா் இளைஞா் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ச.ஜெகதீசன் என்பவருக்கும் சசிகுமாருக்கும் இருந்து வந்த முன் விரோதத்தில், சசிக்குமாா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து இவ்வழக்கில் தொடா்புடைய ஜெகதீசன் மற்றும் வடசிறுவளூா் பகுதியைச் சோ்ந்த ஏ.ஜெகன்குமாா்(20), கு.ஏழுமலை(20) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.