மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கோவிந்தன்(48), லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரேணுகா(38). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகும் நிலையில், 3 மகன்கள் உள்ளனா்.
தம்பதியினரிடையே கடந்த 3 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கோபித்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை ரேணுகா அந்தப் பகுதியிலுள்ள தோப்புக்கு சென்று விட்டு திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த கோவிந்தன் அவரை வழிமறித்து கல்லால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ரேணுகாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கோவிந்தனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.