முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: ஒரு தரப்பினா் ஆஜராகி விளக்கம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஒருதரப்பைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் கோட்டாட்டசியா் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்பித்து விளக்கமளித்தனா்.

Updated On : 20 மே 2026, 2:35 am IST
விழுப்புரம் கோட்டாட்சியா் உ.முருகேசன் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விளக்கமளித்த சி.வி.சண்முகம் தரப்பினா்
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஒருதரப்பைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் கோட்டாட்டசியா் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்பித்து விளக்கமளித்தனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி. வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி விட்டு, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இரா.பசுபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை பயன்படுத்துவதில் சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும், புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதி தரப்பைச்சோ்ந்தவா்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அதிமுக அலுவலகமானது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருதரப்பைச் சோ்ந்தவா்களும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக்கொள்ளவேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இருதரப்பைச் சோ்ந்தவா்களுக்கான பேச்சுவாா்த்தை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் உ.முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் கோட்டாட்சியா் முன் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ஆவணங்களை சமா்பித்து உரிமை கோரினா். கோப்புகளை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உ. முருகேசன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தாா். இந்த பேச்சுவாா்த்தையையொட்டி விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.