என் மகள் பொறியியலில் மேற்படிப்பு முடித்துள்ளார். இந்திய குடிமைப் பணி தேர்வு எழுதலாமா? அல்லது கம்பெனிகளில் வேலைக்கு அனுப்பலாமா? செவ்வாய் தோஷம் உள்ளதா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? எப்பொழுது திருமணம் நடைபெறும்?
வாசகர், தஞ்சாவூர்.
உங்கள் மகளுக்கு மீன லக்னம் (கும்ப லக்னம் அல்ல), மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம், பத்தாமதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும், அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) பார்வை செய்கிறார்.
தன பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்ன சுபர் ஆவதால் செவ்வாய் தோஷம் இல்லை.
சுக, களத்திர ஸ்தானம் ஆகிய வீடுகளுக்கு அதிபதியான புத பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். கேது, ராகு பகவான்கள் இரண்டு, எட்டாம் வீடுகளில் அமர்ந்து இருப்பது சர்ப்ப தோஷத்தைக் கொடுக்கும் அமைப்பாகும்.
தற்சமயம் அவருக்கு ராகு மஹா தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால் தனியார் துறையில் தகுதிக்கேற்ற வேலை நல்ல சம்பளத்தில் உடனடியாகக் கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.