எங்களின் மூத்த மகன் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். படிப்புக்கு ஏற்ற பணி இல்லை. அவருக்கு நிரந்தர பணி எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடைபெறும். களத்திர தோஷம் உள்ளதா? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வாசகர், வாலாஜா.
உங்கள் மகனுக்கு கும்ப லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் (எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது) பெற்று களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவானுடன் இணைந்து இருக்கிறார்.
இதனால் புத ஆதித்ய யோகமும் ஏற்படுகிறது. களத்திர ஸ்தானாதிபதி தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பது குறை. மேலும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் களத்திர ஸ்தானாதிபதியுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
தற்சமயம் சூரிய மஹா தசையில் முற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த படிப்புக்கேற்ற நிரந்தர வேலையும் திருமணமும் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட்டு வரவும்.