என் மகளும் மருமகனும் வெளிநாட்டில் 20 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இருப்பினும் இன்னும் "கிரீன் கார்டு' கிடைக்கவில்லை. என் மருமகனின் ஜாதகத்தைப் பார்த்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறவும்?
-வாசகர், கோவை.
உங்கள் மருமகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிர, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
இரண்டாம் வீட்டிற்கும், ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று பதினொன்றாமதிபதியுடன் இணைந்திருக்கிறார். பத்தாமதிபதி சூரிய பகவான் பத்தாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று மூன்று, நான்காம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவானுடன் இணைந்து இருக்கிறார்.
பத்தாம் வீட்டில் சூரிய பகவான் திக் பலம் பெற்று இருப்பதால் உத்தியோகத்தில் சிறப்பான இடத்தை எட்டி விடுவார். தற்சமயம் பதினொன்றாம் வீட்டில் பலம் பெற்றமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு "கிரீன் கார்டு' கிடைத்துவிடும். தொடரும் உச்ச குரு பகவானின் தசையில் குழப்பங்கள் மறைந்து குதூகலம் நிறையும். அவரை செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரச்சொல்லவும்.