முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 32 வயதாகிறது; நல்ல படிப்பாளி. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று, தற்சமயம் மத்திய அரசில் நல்ல பொறுப்பான பதவியில் இருக்கிறார்.

என் மகனுக்கு 32 வயதாகிறது; நல்ல படிப்பாளி. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று, தற்சமயம் மத்திய அரசில் நல்ல பொறுப்பான பதவியில் இருக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

என் மகனுக்கு 32 வயதாகிறது; நல்ல படிப்பாளி. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று, தற்சமயம் மத்திய அரசில் நல்ல பொறுப்பான பதவியில் இருக்கிறார். சில ஆண்டுகளாக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி, தவறான பாதையில் செல்கிறார். லாகிரி வஸ்துகளையும் பயன்படுத்துகிறார். பெரிய பதவிகளுக்கு செல்லக்கூடிய திறமை இருந்தும் அவர் தடம்மாறிச் செல்வதைப் பார்க்க மனம் துடிக்கிறது. திருந்துவாரா மாட்டாரா? என்ன குறை? திருமணம் நடக்குமா? ஆயுள் பற்றியும் கூறவும்... 

-வாசகி, சென்னை.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னம் என்பது உயிர் ஸ்தானமாகும். உடல், உடலுழைப்பு, வடிவம், பெருமை, வயிறு, தலை, மூளை, நினைவு, மனம், அழகு, புகழ், அடையாளம், மகிழ்ச்சி (துக்கம்), ஆயுள், ஆரோக்கியம், மற்றவர்களைக் காக்கும் நிலை, தலைமைப்பீடம், ஜீவனம், உடல்நலம், உறக்கம், எண்ணங்கள், கனவு, தலைமுடி, அங்க லட்சணம், புலன்கள் இதன் அம்சங்கள் யாவும் இந்த "லக்னம்' என்கிற ஒன்றாம் வீட்டைக் கொண்டு குறிப்பிட்டுச் சொல்லலாம். 
இந்த பாவம், விதி என்ற பாவம் என்பதால் இதனை சூரியனை வைத்தே கணக்கிடப்படுகிறது. அதனால் இந்த பாவத்திற்கு சூரிய பகவான் காரகராகிறார். இந்த பாவத்தைப் பார்க்கும் பொழுது, இப்பாவ பலத்தோடு சூரிய பகவானையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது வழக்கமாகும். 
அவருக்கு லக்னாதிபதி சூரிய பகவானாகி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
சூரிய பகவானை "பிரதமாதிபன்' (முதல்வன்) என்றழைப்பார்கள். அவர் ஆத்ம காரகர் ஆவதால் இந்த ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதற்கு சூரிய பகவானின் சுப பலம் தேவைப்படுகிறது. 
லக்னாதிபதி தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து 
உயரும். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஆயுள் புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் (உச்ச தன ஸ்தானத்தில்) ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
ஐந்தாமதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிறிய முயற்சிகளில் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உண்டாகும். 
எதிர்பார்த்த / எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், அங்கு மூலத் திரிகோணம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் மீதும், குரு பகவானின் ஏழாம் பார்வை தன் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. 
தைரிய, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் மூன்றாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் உச்சம் பெறுகிறார்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் இரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சமடைகிறார். 
ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
லக்னத்தில் கேது பகவான் சுய சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். இதனால் தீர்க்காயுள் உண்டு. களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகு பகவான் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
அவருக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் புத மஹா தசையில் சந்திர பகவானின் புக்தி நடக்கும். 
ஜாதகத்தில் முக்கிய குறை "லக்ன சந்தி'; அதாவது கடக லக்னம் முடிந்து, சிம்ம லக்னம் தொடங்கும் நேரத்தில் (ஒரு பாகை முடிவதற்குள்) பிறந்திருக்கிறார்; இது "லக்ன சந்தி' எனப்படுகிறது. 
லக்னம் என்கிற உயிர் ஸ்தானம் பலம் குறைந்திருக்கிறது. சுக்கிர பகவான் லாகிரி வஸ்துகளுக்கு காரணமாகிறார். சுக்கிர பகவான் சர்ப்பக் கிரகமான ராகு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதும், களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனி பகவான் சுக்கிர பகவானின் சாரத்தில் இருப்பதும் குறை. 
மற்றபடி சுக்கிர பகவான் ராசியிலும், நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருப்பதால், அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு (அதாவது ராகு பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியவுடன்) அவரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். மன மாற்றங்களும் உண்டாகிவிடும். அந்த காலகட்டத்தில் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். முடிந்தால், சனி அஷ்டக சுலோகத்தைப் படித்து வரவும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments