முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

பட்டப்படிப்பு படித்துள்ள என் மகன் எங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறார். பெரிய லாபம் இல்லை; திருமணமும் ஆகவில்லை. 20 வருடங்களுக்கு முன் நன்றாக வாழ்ந்த குடும்பம்.

பட்டப்படிப்பு படித்துள்ள என் மகன் எங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறார். பெரிய லாபம் இல்லை; திருமணமும் ஆகவில்லை. 20 வருடங்களுக்கு முன் நன்றாக வாழ்ந்த குடும்பம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

பட்டப்படிப்பு படித்துள்ள என் மகன் எங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்கிறார். பெரிய லாபம் இல்லை; திருமணமும் ஆகவில்லை. 20 வருடங்களுக்கு முன் நன்றாக வாழ்ந்த குடும்பம். தற்சமயம் மிகவும் நலிவடைந்து விட்டது. மறுபடியும் பழைய நிலைக்கு வருவோமா? மீண்டும் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா? 

- வாசகி, கிருஷ்ணகிரி.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் என்று வருகிறது; புனர்பூச நட்சத்திரம் அல்ல. இத்தகைய நிலையை "நட்சத்திர சந்தி' என்றழைப்பார்கள். 

Advertisement

லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் சர்ப்ப கிரகத்தின் சாரத்தில் அமர்ந்திருப்பது குறை. அதோடு சந்திர பகவானுக்கு சர்ப்ப கிரகங்களின் சம்பந்தம் எந்த வகையில் ஏற்பட்டாலும் சிறிது மனக்குழப்பம், சஞ்சலம், முடிவெடுப்பதில் சிரமங்கள் ஆகியவை உண்டாகும். 

பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று, வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருப்பது சிறப்பு. 

இதனால் பூர்வபுண்ணியம் சிறப்பாக அமைகிறது என்றும், செய்தொழிலில் மேன்மை உண்டாகும் என்றும் கூற வேண்டும். 

ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று, நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் உச்ச செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான தன் ஆட்சி வீடான மீன ராசியின் மீதும் படிகிறது. குரு பகவானின் உச்ச பலத்தால் அனைத்து சிறப்புகளும் தேடாமலேயே கிடைக்கும்.

தன காரகர், புத்திர காரகராகவும் ஆவதால் இந்த வகையிலும் குறைவு ஏற்படாது. தனாதிபதி சூரிய பகவான் ஆறாம் வீட்டில் வர்கோத்தமம் பெற்றமர்ந்திருக்கிறார். 

தன காரகர் உச்சம்; தனாதிபதி வர்கோத்தமம் பெறுவதால் வருமானம் ஊற்று போல் வருவதற்கு இதுவே போதுமானது. 

பௌர்ணமி யோகம்: தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் (மூன்று,  பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது) பெற்று, நவாம்சத்தில் கடக ராசியை அடைந்து, புத ஆதித்ய யோகத்தையும் பெற்று, தன் ஆட்சி வீடான மிதுன ராசியையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் பார்வை செய்கிறார். சூரிய, சந்திரர்கள் சம சப்தம பார்வையைப் பெறுவதால் பெளர்ணமி யோகமும் உண்டாகிறது. 

சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவானின் சுப பார்வையைப் பெற்று நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். 

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் அடைகிறார். 

களத்திர ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். ராகு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியையும், கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியையும் அடைகிறார்கள்.

களத்திர ஸ்தானாதிபதி சனி பகவான் அசுபர் சாரம் பெற்ற ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். களத்திர காரகர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், சனி பகவான் நவாம்சத்தில் அதிபலம் பெற்றிருப்பதும் குறைகளைக் குறைக்கும் அம்சங்களாகும். 

மற்றபடி தற்சமயம் புத பகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும் உண்டாகும். செவ்வாய், சனி பகவான்கள் வலுவாக உள்ளதால் விவசாயம் அவருக்கு ஏற்றதாகவே அமைகிறது. எனவே அதில் முழு ஈடுபாடு செலுத்தலாம். 

வாழ்க்கையில் திடீர் சரிவுகளுக்கு பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திரிகோணாதிபதிகளின் குறைந்த பலம், லக்னாதிபதி நலிவடைதல் போன்றவை குறிப்பபிடத்தக்க காரணங்களாக அமைகின்றன. 

அவருக்கு பித்ரு தோஷம் குறைவாக இருந்தாலும், சூரிய பகவான் மறைவு பெற்றிருப்பது அனுகூலமான அமைப்பல்ல. அதோடு "உச்சனை உச்சன் பார்த்தால் பரதேசி அல்லது சுகவாசி' என்பார்கள். 

அதனால் இத்தகைய ஜாதகர்கள் உயர்வான நிலைக்குச் சென்று, வாழ்க்கையில் கீழே வந்து, மறுபடியும் மேலே ஏறி விடுவார்கள். 

தற்சமயம் நடக்கும் புத மஹா தசை விபரீத ராஜயோகம் பெற்றிருப்பதால், இந்தத் தசையிலேயே மறுபடியும் உங்கள் குடும்பம் பழைய நல்ல நிலைமையை எட்டிவிடும். வாழ்ந்து கெட்டவர்கள் பலருக்கும் மேற்கூறிய குறைகளில் ஏதாவது ஒன்று இருக்கும்; மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments