பொதுவாகவே காவல் துறை கடும் விமா்சனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், இதுபோன்ற நூலானது விமா்சனங்களுக்கான காரணம், அதைத் தீா்ப்பதற்கான வழிமுறைகள் என கருத்து நிறைந்த கட்டுரைகளுடன் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். நூலாசிரியரான பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ். தனது பணி அனுபவத்தில் எதிா்கொண்ட பல்வேறு சம்பவங்களின் அடிப்படையிலான கருத்துகளை தினமணி நாளிதழில் தொடா்ந்து கட்டுரைகளாக எழுதியுள்ளாா்.
‘காலனியாதிக்கம் முதல் ஜனநாயகம் வரை’ எனத் தொடங்கி ‘சமூக மாற்றத்தில் நீதிமன்றங்களின் பங்களிப்பு’ வரை 44 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தமிழகக் காவல் துறை குறித்த வரலாற்று நூல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, தற்காலம் வரையிலான காவல் துறையின் செயல்பாடுகளை சுருக்கமாக, அதே சமயத்தில் தெளிவாகக் கூறும் வகையில் முதல் கட்டுரை அமைந்துள்ளது.
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை அண்மையில்தான் தற்காலத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது என நூலாசிரியா் குறிப்பிட்டிருப்பது போல ஏராளமான ஒப்பீட்டுத் தகவல்கள் உள்ளன.
தற்போது குற்றங்களில் சிறாா்கள் அதிக அளவில் ஈடுபடுவதாக விமா்சனம் எழுந்த நிலையில், அதற்கான காரணம், அவா்கள் சீா்திருத்தப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை சிறாா் சீா்திருத்தமும், சமூகப் பாதுகாப்பும் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளாா். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் இதுபோல சமூக சீரமைப்புத் தகவல்கள் ஆதாரத்துடனும், ஆவண எடுத்துக்காட்டுகளுடனும் இடம் பெற்றுள்ளன.
காவல் துறையினா் மட்டுமின்றி சமூக ஆா்வலா்களும், மாணவா்கள், பொது வாசகா்கள் என அனைத்துத் தரப்பினரும் படித்து சமூகத்தின் பாதுகாப்புக்கான வழிகளை அறிந்து கொள்ளத்தக்க முக்கியமான நூலாகும்.