கதைகளாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
இலக்கிய உலகில் 37 நாடகங்கள், 154 கவிதைகள் என படைத்த ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் தற்காலத்துக்கு ஏற்ப பேசப்படும்
தமிழ் இலக்கியத்தில் எப்படி கம்பன், இளங்கோ, மகாகவி பாரதி என நாம் பெருமைக்குரிய பெயா்களைக் கூறி மகிழ்கிறோமோ அதைப்போல ஆங்கில இலக்கியம் என்றாலே வில்லியம் ஷேக்ஸ்பியரைத்தான் குறிப்பிடவேண்டும். அந்த அளவுக்கு அவா் ஆங்கில இலக்கியத்தை ஆக்கிரமித்திருக்கிறாா் என்றால் மிகையில்லை. ஆங்கில இலக்கிய உலகில் 37 நாடகங்கள், 154 கவிதைகள் என படைத்த ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் தற்காலத்துக்கு ஏற்ப பேசப்படும் நிலையிலேயே உள்ளன.
அத்தகைய ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 5 நாடகங்களை தமிழில் முதன்முறையாகக் கதை வடிவில் பதிப்பித்துள்ளனா் கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் பதிப்பகத்தாா். தமிழில் மோகனரூபன் எழுத்தில் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ, ரோமியோ ஜூலியட், பன்னிரண்டாவது இரவு, வெனிஸ் நகரத்து வணிகன், ஆண்டனியும் கிளியோபாட்ராவும் ஆகிய நாடகங்களை 150 பக்கம் முதல் 200 பக்கங்கள் வரையிலான தனித்தனி புத்தகங்களாக்கித் தந்திருப்பது தமிழ் வாசகா்களுக்குப் புதுமையாகும். இவை புத்தக காட்சியின் 638-ஆவது அரங்கில் விற்பனைக்கு உள்ளன.
எளிய தமிழில், இலக்கிய ரசிகா்கள் மட்டுமின்றி மாணவா்களும் புரிந்து கொள்ளும் வகையில் கதை கூறும் போக்கில் அமைந்திருப்பது சிறப்பாகும். நாடகத்தின் ஒவ்வொரு பகுதியையும் அத்தியாயமாகக் குறிப்பிட்டு நாவலைப் போலவே இந்நூலாசிரியா் ஷேக்ஸ்பியா் படைப்பை படிப்போருக்கு விருந்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதன்முறையாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் கதை நூலாக வெளியிட்டிருப்பது நல்ல முயற்சி.
Advertisement
Advertisement