தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றவாது நாளாக வியாழக்கிழமை வர்த்தகத்திலும் ஏற்றம் கண்டது.
சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு ஆபரண உற்பத்தியாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்து வருவது ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை 10 கிராம் தங்கம் ரூ.29,250-க்கு விற்பனையானது.
அதேசமயம், தொழிற்சாலைகள் மற்றும் நாணய உற்பத்தியாளர்களிடையே தேவை குறைந்ததையடுத்து வெள்ளியின் விலை ரூ.50 சரிவடைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.41,250-க்கு விற்பனையானது.
இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
உலக அளவில் மட்டுமின்றி உள்ளூர் சந்தையிலும் ஆபரணங்களுக்கான தேவை சூடுபிடித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.10கிராம்) தங்கத்தின் விலை 1,200 டாலராக அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 0.87 சதவீதம் உயர்ந்து 16.84 டாலராக காணப்பட்டது.
தலைநகர் தில்லியில் 99.9 சதவீதம் மற்றும் 99.5 சதவீதம் தூய தங்கத்தின் விலை தலா ரூ.150 அதிகரித்து முறையே ரூ.29,250-ஆகவும், ரூ.29,100-ஆகவும் இருந்தது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.29,250-ஆக காணப்பட்டது. அதன் பிறகு சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை தற்போதுதான் பழைய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்தது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.24,300-க்கு விற்பனையானது. மேலும், 100 எண்ணிக்கை கொண்ட வெள்ளி நாணயங்களின் வாங்கும் விலை ரூ.72,000- ஆகவும், விற்கும் விலை ரூ.73,000-ஆகவும் காணப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.