இந்தியா போஸ்ட் முதல் முதலாக பணப்பட்டுவாடா வங்கி சேவையை திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.பி.சிங் தெரிவித்ததாவது:
பணப்பட்டுவாடா வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து அஞ்சலகத் துறை அண்மையில் பெற்றது. அதையடுத்து, முதல் கட்டமாக ராய்பூர் மற்றும் ராஞ்சி நகரங்களில் சோதனை அடிப்படையில் இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கி சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த வங்கியில் ரூ.25,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.5 சதவீத வட்டியும், ரூ.25,000-ரூ.50,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5 சதவீத வட்டியும், ரூ.50,000-ரூ.1,00,000 வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வங்கியில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.800 கோடியாகும். மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே ரூ.275 கோடி செலுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாடு தழுவிய அளவில் 650 கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.