இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) வேலைவாய்ப்பு எப்போதும் போல் இருக்கும்; அதில் மாற்றமிருக்காது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டிவி மோகன்தாஸ் பய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நடப்பு ஆண்டு அக்டோபர் முதல் 2018 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையும் என்று அண்மையில் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் ஐ.டி. துறையில் இயந்திரமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிக அளவில் புகுத்தப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்றதொரு ஆய்வறிக்கை கடந்த ஏப்ரல் மாதமும் வெளியானது. அதில், ஐ.டி. துறையில் நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னணியில் உள்ள ஐந்து ஐ.டி. நிறுவனங்களில் மொத்தம் 10 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், அதில் 1 சதவீதம் குறைந்துள்ளது. அதற்கு, முதல் அரையாண்டில் அந்த நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு யாரையும் தேர்வு செய்யாததே முக்கிய காரணம். ஆனால், இரண்டாம் அரையாண்டில் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை புதிய பொறியியல் பட்டதாரிகள் பணிக்குச் சேர்க்கப்படுவார்கள். இதன் காரணமாக, ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பை பொருத்தவரையில் எந்த மாற்றமுமிருக்காது.
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்துக்கு மாறுவோர் விகிதம் சராசரியாக 15 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம், ஐ.டி. வேலைவாய்ப்பு சந்தையில் இன்னும் நல்ல பணிவாய்ப்புகள் இருப்பதை நாம் உணரலாம் என்றார் அவர்.