டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 2,600 கோடி டாலர் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சக உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
வியாழக்கிழமை(ஆக.16) நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 70.40-ஆக சரிந்தது. இது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. எனவே, ரூபாய் மதிப்பு சரிவால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக இந்த விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65-ஆகவும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 65 டாலராகவும் இருந்த நிலையில், 22.04 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 8,770 கோடி டாலர் (ரூ.5.65 லட்சம் கோடி) செலவிடப்பட்டது.
ஆனால், ரூபாய் மதிப்பு தற்போது 70 என்ற அளவில் சரிந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 22.70 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ள நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அதற்கான இறக்குமதி செலவினம் 2,600 கோடி டாலர் அதிகரித்து 11,400 கோடி டாலராக உயரும் என்றார் அவர்.