கார், வேன், விற்பனை சிறப்பாக இருந்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 19.65 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்தூர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நீண்டகாலமாக கவலையளிக்கும் விதத்தில் இருந்த மோட்டார் வாகனங்களின் விற்பனை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த வாகனங்களின் விற்பனையும் மே மாதத்தில் சிறப்பானதாகவே அமைந்திருந்தது. இதற்கு, புதிய தயாரிப்புகள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சாதகமாக இருந்ததே.
உள்நாட்டில் மே மாதத்தில் 3,01,238 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டு மே மாதத்தில் விற்பனையான 2,51,764 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 19.65 சதவீதம் அதிகமாகும்.
அதேபோன்று பயணிகள் வாகன ஏற்றுமதியும் 3.45 சதவீதம் உயர்ந்து 59,648-ஆக காணப்பட்டது.
இருசக்கர வாகன விற்பனை 9.19 சதவீதம் வளர்ச்சியடைந்து 18,50,093-ஆகவும், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 15.61 சதவீதம் அதிகரித்து 12,21,559-ஆகவும் இருந்தன.
அதேசமயம், ஸ்கூட்டர்கள் விற்பனை 1.4 சதவீதம் சரிந்து 5,55,497-ஆக காணப்பட்டது. இதற்கு, கையிருப்பு அதிகரித்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
வர்த்தக நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் விற்பனை 43.06 சதவீதம் உயர்ந்து 76,478-ஆனது. மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளதால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, வரும் மாதங்களிலும் வர்த்தக வாகனங்களின் விற்பனை தொடர்ந்து விறுவிறுப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு மே மாதத்தில் ஒட்டுமொத்த பிரிவு வாகனங்கள் விற்பனை 20,35,610 என்ற எண்ணிக்கையிலிருந்து 12.13 சதவீதம் அதிகரித்து 22,82,618-ஆனது என்றார் அவர்.