நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் வகையில், ஜேபார்ம் சர்வீசஸ் என்ற புதிய செயலியை டாஃபே நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீநிவாஸன் கூறியதாவது: நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றளவும் நவீன தொழில்நுட்பத்திலான வேளாண் உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலையிலேயே உள்ளனர். அவர்களை இலக்காக கொண்டுதான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிராக்டர் மற்றும் வேளாண் உபகரணங்கள் வைத்து வாடகைக்கு விட விரும்பும் விவசாயி மற்றும் அதனை வாடகைக்கு பெற விரும்பும் விவசாயி இந்த செயலி மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இதனால், மூன்றாம் நபரின் தலையீடு இன்றி விவசாயிகள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றார் அவர்.