வரும் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடனில்லாத நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முகேஷ் அம்பானி பேசியதாவது:
அடுத்த 18 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை கடனில்லாத குழுமமாக உருவாக்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நிறுவனத்தின் கச்சா எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தகத்தின் 20 சதவீத பங்குகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ மற்றும் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பீபி நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்படவுள்ளோம். இந்த பங்கு விற்பனையின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி கிடைக்கும்.
இந்த இரட்டை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் தொகையும், ஜியோவின் உள்கட்டமைப்பு சொத்தின் மீதான முதலீட்டு வருமானமும் ரிலையன்ஸ் குழுமத்தை வரும் 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் பூஜ்யம்-நிகர கடன் கொண்ட நிறுவனமாக உருவாக்கும்.
தற்போதைய நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தை உள்ளடக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 13,400 கோடி டாலர் (ரூ.9.38 லட்சம் கோடி). 2019 மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர கடன் ரூ.1,54,478 கோடி. பங்கு விற்பனையின் மூலம் இந்த கடன் தொகை சரி செய்யப்படவுள்ளது. இதன் மூலம், உலகளவில் மிக வலுவான நிதி நிலை அமைப்பைக் கொண்ட குழுமமாக ரிலையன்ஸ் உருவெடுக்கும். பங்கு விற்பனை நடவடிக்கையை 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஜிகா ஃபைபர் சேவை தொடக்கம்: வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியிலிருந்து ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையதளம், ஆயுள்கால இலவச லேண்ட் லைன் இணைப்பு, ஹெச்டி தரத்தில் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை மாதம் ரூ.700 கட்டணத்தில் பெற முடியும் என்றார் அவர்.