அமெரிக்காவைச் சேர்ந்த வலைதள வர்த்தக நிறுவனமான அமேஸானுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய புதிய வளாகம் தெலங்கானா ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமோஸான் நிறுவனத்தின் துணைத் தலைவர் (சர்வதேச கட்டுமானம்) ஜான் ஷோட்லர் கூறியதாவது:
சுமார் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 40 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதில், 18 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் மூலமாக இந்தியாவில் 15,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், பிற பகுதிகளில் உள்ள நிறுவனத்தின் பணியாளர்களும் இப்புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதுவரை, 4,500 பேர் ஏற்கெனவே புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி இந்த வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 2,000 பணியாளர்களின் உழைப்பில் 39 மாதங்களில் இப்புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாக உருக்கு பயன்படுத்தப்பட்டு இந்த வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.