ரூ2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தை தனது பங்குகளை விற்பனை செய்வதற்காக நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
கத்தார், அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்களும், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு வர்த்தகத் துறை நிறுவனமான கேகேஆர் போன்றவை ரிலையன்ஸ் பவர் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் நிறுவனத்தின் உரிமையாளரான அனில் அம்பானியிடம் 75 சதவீத பங்குகள் இருந்தன. இப்போது தங்களிடம் உள்ள நேரடிப்பங்குகளில் 18 முதல் 19 சதவீதத்தை விற்பனை செய்ய அவர் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. தங்கள் நிறுவனத்துக்கு கடன் தந்தவர்களின் பணத்தை திருப்பி அளிக்கும் நோக்கில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. கடனாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் வட்டியை அந்த நிறுவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை 2.20 சதவீதம் அதிகரித்து ரூ.11.60 விற்பனையானது.