ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக அவ்வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகேஷ் மஹிஜாவுக்கு வங்கியின் இயக்குநர் குழு ஏற்கெனவே கடந்த மார்ச் மாதத்தில் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இறுதியில் அனுப்பிய கடிதத்தில் அவரின் நியமனத்துக்கு தமது ஒப்புதலை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அனுமதியை அடுத்து, ராகேஷ் மஹிஜா, ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட இயக்குநர், செயல் சாரா (பகுதி நேரம்) தலைவராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இவரது நியமனம் 2019 ஜூலை 18-ஆம் தேதியிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.
ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராகேஷ், எஸ்கேஎஃப் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், டாடா ஹனிவெல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.