புது தில்லி: கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆா்காம்) செப்டம்பா் காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.30,142 கோடி இழப்பை சந்தித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஆா்காம் செயல்பாடுகள் மூலம் ரூ.302 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.977 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக குறைவான அளவாகும்.
கடந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ரூ.1,141 கோடி லாபம் ஈட்டிய நிலையில் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ரூ.30,142 கோடி இழப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுக்கு உரிமக் கட்டணமாக ரூ.23,327 கோடி, அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமாக ரூ.4,987 கோடி என மொத்தம் ரூ.28,314 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாக ஆா்காம் தெரிவித்துள்ளது.