வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் வகையிலும், ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தலைநகர் தில்லயில் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ ரூ.20-ரூ.30-ஆக இருந்த வெங்காயத்தின் விலை தற்போது ரூ.40-ரூ.50-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேலும் விலை அதிகரித்து சமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச விலைக்கும் கீழாக ஏற்றுமதியாளர்கள் வெங்காய ஏற்றுமதியை மேற்கொள்ள முடியாது. எனவே, உள்நாட்டில் அதன் அளிப்பு அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வெங்காய மகசூல் ஆண்டுக்கு 1.7-1.8 கோடி டன்னாக உள்ளது. இதில், சாரசரியாக 15 லட்சம் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.