புதுப்பிக்கப்பட்ட எம்என்பி ( மொபைல் எண் மாறாமல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி) விதிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நவம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குறை ஆணையமான "டிராய்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எம்என்பி திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எளிமையாகவும், வேகமாகவும் பயன்பெற டிராய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒரே சேவை வட்டத்திற்குள் எம்என்பி வசதி கோரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நாள்களில் அதனை நிறைவேற்றித்தர காலக்கெடு விதிக்கப்பட்டது. அதேபோன்று, வெவ்வேறு சேவை வட்டங்களில் எம்என்பி கோரும் வாடிக்கையாளர்களுக்கான காலக்கெடு 7 நாள்களிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 2019, செப்டம்பர் 30-வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த கால அவகாசம் 2019, நவம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் டிராய் தெரிவித்துள்ளது.