இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அமெரிக்காவிலிருந்து 72 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வணிக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர பொது இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களில் அமெரிக்கா 45 லட்சம் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு சப்ளை செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் சப்ளை செய்யப்பட்ட அளவான 26 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 72 சதவீதம் அதிகமாகும். இந்தியாவுக்கு பாரம்பரியமாக கச்சா எண்ணெயை வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து இதர நாடுகளின் இறக்குமதியை நாடியதே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.
இருப்பினும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் அளிப்பில் இராக் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் நான்கில் ஒரு பங்கை இராக் அளிக்கிறது.
மதிப்பீட்டு காலத்தில் இராக்கிலிருந்து 2.12 கோடி டன் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் இறக்குமதியான 1.90 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது இது 12 சதவீதம் அதிகம்.
ஒட்டுமொத்த அளவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 9.39 கோடி டன்னிலிருந்து 9.12 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் அளிப்பதில் சவூதி அரேபியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. கடந்த 2017-18 நிதியாண்டில் முதல் முறையாக இராக் அந்த முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு சவூதி அரேபியாவை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது. நடப்பாண்டில் சவூதி அரேபியாவிலின் கச்சா எண்ணெய் இறக்குமதி 1.56 கோடி டன்னிலிருந்து 1.77 கோடி டன்னாக அதிகரித்தது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ளதால் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.