முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா, கோஆப்டிவ் நிறுவனத்தின் 21.85 சதவீதப் பங்குகளை இரண்டு தவணைகளில் வாங்க முடிவெடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கோஆப்டிவ் நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக ரூ.5.80 கோடியும் இரண்டாம் கட்டமாக ரூ.3.20 கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளது. முதல் கட்டத்தில் அந்நிறுவனத்தின் 15,392 மாற்றக்கூடிய பங்குகளையும், 6,927 பங்குகளையும் 30 நாள்களுக்குள் வாங்க உள்ளோம்.
இரண்டாம் கட்டத்தில் 12,314 மாற்றக்கூடிய பங்குகளை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் வாங்கவுள்ளோம். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கோஆப்டிவ் நிறுவனத்தின் 21.85 சதவீதப் பங்குகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவழி மருந்துப் பொருள்கள் விற்பனை, சந்தைப்படுத்துதல், நோயாளிகளுக்கான உதவிகள், சுகாதாரத் தகவல்கள் மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் கோஆப்டிவ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.